இந்து – இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியை நோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதி முட்டிக் கலக்கும் நிலையிற்றான் ஒவ்வொரு பண்பாடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் பண்பிற்கு வரலாற்றுண்மைக்கு எந்த நாகரிகமும், பண்பாடும் விதிவிலக்காக முடியாது. இந்த வரலாற்று நியதியின் அடிப்படையில் இஸ்லாமிய பண்பாட்டிற்கும் இந்துப் பண்பாட்டிற்குமிடையிலான கலாச்சாரத் தொடர்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கலாச்சாரத் தொடர்பை நாம் பின்வரும் அடிப்படையிலேயே ஆராயலாம்.

  1. இஸ்லாமிய தத்துவஞானத்தில் இந்து தத்துவஞானத்தின் ஆதிக்கம்
  2. இஸ்லாமிய வான நூலியலில் இந்து ஆதிக்கம்
  3. இஸ்லாமிய மருத்துவத்துறையில் இந்து ஆதிக்கம்
  4. இஸ்லாமிய சங்கீதத் துறையில் இந்து ஆதிக்கம்

பொதுவாக இந்தியாவிற்கும் அரேபியாவிற்குமிடையிலான வணிகத் தொடர்பு இஸ்லாத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை நாம் சங்க இலக்கியக் குறிப்புகள், ஆரம்பகால அரபிலக்கியக் குறிப்புகள், கிரேக்க, ரோம, வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ஆனால், இந்தியாவுக்கும் அரேபியாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் அவர்களின் காலத்தில் கி.பி. 637 இல் இஸ்லாமியப் படையினரால் தானா (மும்பாய்) முற்றுகையிடப்பட்டதுடன்தான் ஆரம்பமாகின்றது எனலாம். ஆனால், கி.பி. 715 இல் மூஸா பின் காலிமால் இந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அரேபியாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு பலப்பட்டது.

பொதுவாகப் பார்க்குமிடத்து இந்தியாவுக்கும், இஸ்லாமிய உலகத்துக்குமிடையிலான கலாச்சாரத் தொடர்பு கி.பி. 754ம் ஆண்டுடன் ஆரம்பமாகியது எனலாம். இக்காலப்பிரிவில்தான் இந்தியாவிலிருந்து கலாச்சாரத் தூது கோஷ்டியொன்று, அப்போதைய இஸ்லாமிய ராச்சியத்தின் தலைநகரான பக்தாதை அடைந்தது. இந்தத் தூது கோஷ்டியினர் கலீபா அல் மன்சூருக்கு ‘பிரஹ்ம சித்தாந்தத்தின்’ (Brahma Sidhant) பிரதியொன்றை அன்பளிப்பாக அளித்தனர். கலிபா அல்மன்சூர் தனது அரண்மனையிலுள்ள வானநூல் வல்லுனரான அல் – பாஸாயி என்பவரை இந்தக் கலாச்சாரத் தூது கோஷ்டியின் தலைவரின் உதவியோடு அந்நூலை அரபு மொழியில் மொழிபெயர்க்கும்படி உத்தரவிட்டார். இந்தப் பிரதி, மன்சூருக்குப் பின் பதவிக்கு வந்த கலீபா அல்-மூமினின் கையிலும் இருந்தது. இந்நூலில் பிரபல இஸ்லாமிய வானநூல் வல்லுனரான அல்குவாரிஸ்மி எண்ணற்ற புது அம்சங்களையும் சேர்த்தார். இந்நூல் இஸ்லாமியர்களின் வானநூல் வளர்ச்சியில் சிறந்த ஆதிக்கத்தை வகித்தது. இஸ்லாமிய வானவியல் வல்லாரில் இந்த நூலின் தத்துவத்தைப் பின்பற்றி ‘அல் – ஸித்ஹிந்த்’ என ஒரு குழுவினரே தோன்றினரென்றால் இந்நூல் இஸ்லாமிய வானவியல் துறையின் வளர்ச்சியில் வகித்துள்ள ஆதிக்கத்தை எம்மால் உய்த்துணர முடிகின்றதல்லவா? இது மட்டுமன்றி, ஹிந்து வானவியல் வல்லுனரில் பல குழுவினர்கள் பக்தாதில் இருந்தனர். குறிப்பாக அரபிகளால் ‘அல் – அர்கந்த்’ என அழைக்கப்பட் பிரஹ்மகுப்தாவைச் சேர்ந்த ‘கார்காந்த காத்யக’ என்ற குழுவினரும், ‘அர்ஜப்ஹத்’ என அழைக்கப்பட்ட அர்யபடாவைச் சேர்ந்த தந்தார் குழுவினரும் முக்கியமானவர்கள். இந்தக் கலாச்சாரத் தொடர்பு பற்றி அல்-பிஹ்ரிஸ்த் என்ற நூலை இயற்றிய இப்னு நதீம் என்பார் பின்வருமாறு கூறுகின்றார். ‘இஸ்லாமிய கலீபாக்கள் அறிவுக்கும், அறிஞர்களுக்கும் அளித்த கௌரவத்தின் காரணமாக எண்ணற்ற ஹிந்து அறிஞர்கள் பக்தாதுக்கு வந்தார்கள். இவர்கள் இஸ்லாமியர்களின் அறிவு வளர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் பெரும் பனி புரிந்தனர்’ என்றும் குறிப்பிடுகின்றார்.

வான சரித்திரத் துறையில் மாத்திரமன்றி மருத்துவத்துறையிலும் இந்துக்களின் ஆதிக்கத்தை காணமுடிகின்றது. இஸ்லாமிய ஆட்சியில் அப்பாஸிய கலீபாக்கள் ‘சாரக்’ ‘விஸ்ரத்ஹ்’ ஆகிய மருத்துவ நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்தனர். பிரபல இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இப்னு நதீம், சமஸ்கிருத மொழியிலிருந்து அரபு மொழியில் பெயர்க்கப்பட்ட இம்மருத்துவ நூல்கள் பற்றிய அட்டவணை யொன்றை அளிக்கின்றார். கி.பி. 8ம் நூற்றாண்டளவில் முஸ்லிம் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு இந்நூல்கள் பெரிதும் துணைபுரிந்தன. ‘பிர்தவ்ஸூல் ஹிக்மத்’ என்ற நூலை இயற்றிய அபு பின் ரப்பான் அல் – தபரீ தனது நூலில் பத்தாம் அத்தியாயத்தை இந்திய மருத்துவம் பற்றிய விளக்கத்துக்கென்றே ஒதுக்கியுள்ளார். முஹம்மத் கைரியா அல் – ராஹி இயற்றிய ‘அல் – ஹாவி’ என்ற நூலிலும் இந்திய மருத்துவம் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. பிரபல இஸ்லாமிய மருத்துவ நூல் வல்லரான இப்னு ஸீனாவின் நூலிலும் இந்து மருத்துவத்தின் ஆதிக்கத்தை எமக்கு காணமுடிகின்றது.

பிரபல இஸ்லாமிய புவியியல் அறிஞர் அல்-பிரூனியின் இந்தியா பற்றிய நூல் கி.பி. 9ம், 10ம் நூற்றாண்டின் இந்திய சமுதாய வரலாற்றை ஆராய்வதற்குப் பயன்படுமென பேராசிரியர் ஹிட்டி அபிப்பிராயப்படுகின்றார்.

கி.பி. 715இல் நடந்த இஸ்லாமிய படையெடுப்பின் பின் இந்து இஸ்லாமிய கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்பு மேலும் உத்வேகத்தோடு தொழிற்படுவதை நாம் காணமுடிகின்றது. இஸ்லாமிய வருடத்தின் நான்காம் நூற்றாண்டில் முஸ்லிம் பிரயாணிகள், புவியியல் அறிஞர்கள் இந்தியாவை தரிசித்தனர். இவர்களுள் மசூதி அல்-மக்தீன், இப்னு ஹவ்கல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இது மாத்திரமன்றி முஸ்லிம் தத்துவஞானிகளின் அணுவாதம் பற்றிய கொள்கையிலும் இந்து ஆதிக்கத்தைக் காணமுடிகின்றது. பிரிக்கமுடியாத நுண்ணிய பொருட்களின் கூட்டுச்சேர்க்கையே அணு என முஸ்லிம் தத்துவஞானிகள் நம்பினர். முஸ்லிம் தத்துவஞானிகள் இக்கருத்தை கிரேக்கத் தத்துவஞானிகளிடமிருந்து பெற்றிருக்கலாமென நம்பப்பட்டது. ஆனால் சமீபகாலத்திய ஆராய்ச்சிகள் இக்கருத்தை இந்தத் தத்துவ ஞானிகளிடமிருந்து முஸ்லிம்கள் பெற்றனர், என்ற கருத்தை உண்மைப்படுத்துகின்றன. ஏனெனில், சடப்பொருளின் பிரிக்கமுடியா ஒரு அம்சமாகவே அணுவை இந்திய தத்துவங்கள் மதிக்கின்றன.

அரபு மொழியில் பெயர்க்கப்பட்ட இந்திய சங்கீதத்தின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றிய குறிப்பை இப்னு கிப்தியின் நூல்களில் காண்கின்றோம். மொகலாய அரசர்களுள் ஒருவரான அக்பர் மருத்துவம், வரலாறு முதலிய துறைகளில் அதிக ஆர்வஞ் செலுத்தினார். அது மாத்திரமன்றி எண்ணற்ற இந்து இலக்கி யங்களையும் தத்துவ நூல்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த பெருமை அக்பாரைச் சாரும். கி.பி. 997 இல் அக்பாரின் வேண்டுகோளின் பேரில் அபுல்காதிர் பதூரி ராமாயணத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 990 இல் அக்பாரின் உத்தரவின் பேரில் மகாபாரதமும் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. அபூபஸல் என்பவரால் பகவத்கீதை பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டது.

இத்தனை விடயங்களையும் ஆராயும் பொழுது மத்தியகால இஸ்லாமிய அறிவியல், கலாச்சாரத் துறைகளில், இந்து கலாச்சார, அறிவியல் சாதனைகளின் தாக்கத்தையும், ஆதிக்கத்தையும் காணமுடிகின்றது. அறிவு எங்கிருப்பினும் அதனைக் கொண்டு பயனடைய முஸ்லிம்கள் பின்வாங்கியதே கிடையாது. இதை பிரபல முஸ்லிம் தத்துவஞானி அல் – கிந்தியின் பின்வரும் கூற்று உண்மைப்படுத்துகின்றது.

 

‘முஸ்லிம்களாகிய நாங்கள் அறிவும், உண்மையும் எந்த இடத்திலிருந்து வந்தாலும் அதைக் கொண்டு பயனடையவோ, அன்றி அதை ஏற்றுக்கொள்ளவோ தயங்கியதோ வெட்கித்ததோ கிடையாது. அது எங்கள் முன்னோராலோ, அன்றி அந்தியராலோ அளிக்கப்பட்டாலும் சரியே. உண்மையை நாடுபவனுக்கு, உண்மையை விட சத்தியத்தைவிடச் சிறந்த பொருளில்லை’.

இன, சாதி, மதப் பூசல்கள் நிறைந்து அமைதியற்றுத் தவிக்கும் இன்றைய உலகில், இத்தகைய பல்வேறு இனங்களுக்கிடையே நிகழ்ந்துள்ள கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்புகள் பற்றிய வரலாற்றுண்மைகள் இன, மத ஒற்றுமை நிலைநாட்டுவதில் சிறந்த பங்கை வகிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *