எனது பேராசான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – கலாநிதி ரவூப் ஸெய்ன்

நான்கு தசாப்­தங்­க­ளாக ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றி வந்த கலா­நிதி சுக்ரி அவர்கள் கடந்த செவ்வாய் வபாத்­தா­னார்கள். இழப்பின் வலி தாளாமல் சொற்­க­ளுக்குள் கசியும் கண்­ணீரை துடைத்துக் கொண்டே அவரைப் பற்­றிய சில குறிப்­புக்­களை இங்கு பதிவு செய்­கிறேன். 2016இன் இறுதிக் கூறு­களில் கலா­நிதி அவர்­களை அவ­ரது கல்­கிஸ்ஸை வீட்டில் சந்­தித்து பல்­வேறு உரை­யா­டல்­களில் ஈடு­பட்­டவன் என்ற வகை­யிலும் எனது கலா­நிதி கற்கை நெறிக்கு நெம்­பு­கோ­லாக இருந்­தவர் என்ற வகை­யிலும் இந்தக் குறிப்பை பதி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வது பொருத்தம் என எண்­ணு­கிறேன். இதையும் தாண்டி கலா­நிதி சுக்ரி எனும் ஆய்­வ­றி­வாளர் பற்­றிய இந்த எடுத்­து­ரைப்பு அவர் மீதான எம் அறக் கடப்­பாட்டின் பிர­தி­ப­லிப்­பாக இருக்கும் எனவும் நினைக்­கிறேன்.
புத்­தி­ஜீ­விகள் ஒரு நாக­ரித்­தினைச் சுமக்கும் சக்­க­ரங்கள் ( Intellectual are wheels of a civilization) என்ற Arnold Toynbee எனும் அறி­ஞரின் வாக்­கி­யத்தை கலா­நிதி அவர்கள் எமக்கு அடிக்­கடி நினை­வு­ப­டுத்­து­வார்கள். அந்த வார்த்­தை­க­ளுக்­கு­கேற்ப வாழ்ந்து மறைந்­தவர் சுக்ரி என்­பதில்  எள்­ள­ளவும் ஐய­மில்லை. ஆர்ப்­பாட்­ட­மில்­லாமல் ஓர் அமை­தி­யான அறிவுப் பணி­யையும் சமூக மாற்றப் போரட்­டத்­தையும் தனது ஆய்­வு­க­ளாலும் சிந்­த­னை­யாலும்  முன்­னெ­டுத்­தவர் என்ற மங்­காத பெருமை அவரைச் சாரும்.

1940 ஆம் ஆண்டு மாத்­த­றையில் பிறந்த கலா­நிதி அவர்கள் மாத்­தறை சென்ட் தோமஸ், தர்­கா­நகர் அல்­ஹம்றா, கொழும்பு ஸாஹிரா என்­ப­வற்றின் பழைய மாணவர் ஆவார். சுமார் எட்டு தசாப்த அவ­ரது வாழ்க்­கையில் 50ஆண்­டுகள் ஆய்வு மற்றும் அறிவுப் பணி­க­ளுக்­காக செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூகப் பரப்பில் ஒரு காத்­தி­ர­மான பாத்­தி­ரத்தை வகித்து வந்த அவ­ரது மறைவு ஈடு­செய்ய முடி­யாத இழப்பு என்­பதில் எந்த சந்­தே­க­மு­மில்லை.

கலா­நிதி சுக்ரி அவர்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள கலா­நி­திகள் அனை­வ­ரிலும் மிகத் தனித்­து­வ­மா­னவர். அவர் ஏனை­ய­வர்­க­ளி­லி­ருந்து விலகும் புள்­ளிகள் பல என்­ப­துதான் அதற்குக் காரணம். இந்த சிறப்­புத்­தன்­மையால் பல­ருக்கு அவர் ஓர் ஆதர்­ஷ­ன­மாகத் திகழ்ந்­துள்ளார். இஸ்­லா­மிய தத்­துவம், சூபித்­துவம், சமூ­க­வியல், இஸ்­லா­மியக் கல்விக் கோட்­பாடு, தொல்பொ­ரு­ளியல் போன்ற பரி­மா­ணங்­களில் அவர் கொண்­டி­ருந்த நிபு­ணத்­துவ அறிவு அவர் பற்­றிய ஓர் ஈர்ப்பு விசையை பல­ரி­டையே உரு­வாக்கி இருந்­தது.

கலா­நிதி சுக்ரி அவர்­களின் அணு­கு­முறை

எம்.ஏ.எம் சுக்ரி அவர்கள் எத­னையும் விமர்­ச­ன­பூர்­வ­மா­கவும் அறி­வியல் பூர்­வ­மா­கவும் நோக்கும் மனப்­பாங்கைக் கொண்­டி­ருந்தார். அவ­ரது ஆய்­வு­க­ளிலும் ஆக்­கங்­க­ளிலும் ஓர் ஒப்­பீட்டுத் தத்­துவ நோக்கு பிர­தி­ப­லிப்­பதைக் காணலாம். அந்த ஒப்­பீட்­டுக்கு அவ­ருக்குப் பெரிதும் துணை­நின்­றது அவ­ரது ஆழ­மான வாசிப்பும் தேட­லுமே என்­பதில் சந்­தே­க­மில்லை. இங்கு தான் அவ­ரது தனித்­தன்­மையை நாம் புரிந்து கொள்­கிறோம். இன்­றைய அறி­வு­லத்தின் முக்­கிய பண்­பாக உள்ள பல்­து­றைசார் அணு­கு­முறை (Multi -descipilinary Approach) அவ­ரது பார்­வையின்  தூக்­க­லான சிறப்­பம்­ச­மாகும். உதா­ர­ண­மாக இஸ்­லா­மிய அறிவுக் கோட்­பாடு குறித்து அவர் பேசும்­போ­தெல்லாம் மேலைய உலகின் செல்­வாக்குப் பெற்ற மெய்­யியல் நோக்­கு­களை அவர் இஸ்­லாத்­துடன் ஒப்­பி­டு­கிறார். அதன் மூலம் அறிவு பற்­றிய ஒரு முழு­மைத்­துவப் பார்­வையை (Holistic view) அவர் கட்டி எழுப்­பு­கிறார்.

17ஆம் நூற்­றாண்டில் மேலை உலகில் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த அனுபவவாதம் (Empiricism) முறைசார் கோளாறுகளையும் டேக்­காட்டின் வழி­வந்த அறிவு முதல் வாதத்தின் குறை­பா­டு­க­ளையும் எடுத்துக் காட்டி இஸ்லாம் இரண்­டையும் இணைப்­ப­தோடு நில்­லாமல் வஹி எனும் அறிவு மூலத்தின் தவிர்க்க முடி­யா­மையைத் தத்­ரூ­ப­மாக நிறு­வு­கிறார். இஸ்­லா­மிய கலை­களில் மட்­டு­மன்றி நவீன சமூ­க­வியல் கலை­க­ளு­டனும் அன்­னா­ருக்கு இருந்த ஆழ்ந்த பரிச்­ச­யமே இதற்குப் பின்­பு­ல­மாக இருந்­தது. இங்கு கலா­நிதி சுக்ரி அவர்கள் ஓர் இஸ்­லா­மிய மாண­வ­னுக்கு முன்­னு­தா­ர­ண­மாகத் தோன்­று­கிறார். ஓர் அறி­வு­ஜீவி நிபு­ணத்­துவ அறி­வுப்­பு­லங்­களைக் கடந்து பிற அறிவுத் தொகு­தி­க­ளையும் குறிப்­பிட்­ட­ளவு உள்­வாங்­க­வேண்டும் என்ற பாடத்தை அவர் நமக்குக் கற்றுத் தரு­கிறார். உண்­மையில் கலா­நிதி சுக்ரி அவர்­க­ளிடம் காணப்­பட்ட ஓர் ஒப்­பற்ற தனித்­தன்­மையே இது. அவ­ரது அத்­தனை நூல்­க­ளையும், ஆய்வுக் கட்­டு­ரை­க­ளையும் ஒன்­று­வி­டாமல் படித்த அவ­ரது மாணவன் என்ற வகையில் அவ­ரிடம் இருந்து என்னை ஆகர்­ஷித்த ஒரு விடயம் எல்­லா­வற்­றையும் நாம் கற்க வேண்டும் என்ற அவ­ரது முன்­னு­த­ரணம் எனத் துணிந்து கூறுவேன்.

இன்று முஸ்லிம் சமூ­கப்­ப­ரப்பில் உள்ள மிக முக்­கிய குறை­பா­டு­களில் ஒன்று; இஸ்­லா­மியக் கலை­களைக் கற்ற பாரம்­ப­ரிய உல­மாக்­க­ளுக்கும் மேலைய அறி­வுத்­து­றை­களைக் கற்று நவீ­னத்­துவ முஸ்லிம் புல­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையில் வியா­பிக்கும் சகிக்க முடி­யாத இடை­வெ­ளி­யாகும். ஒரு புறம் ஆப்த வாக்­கி­யங்கள் குறித்த அறிவை மட்டும் கொண்ட உல­மாக்கள் (scholars of religious texts) மற்­றொரு புறம் உல­கையும் அதன் போக்­கு­க­ளையும் குறித்த சூழ்­நிலை அறிவு கொண்­ட­வர்கள் (scholars of context) இணைப்புப் புள்­ளிகள் இல்­லாமல் இரு சாராரும்  இரண்டு பள்­ளத்­தாக்கில் வீழ்ந்து கிடக்கும் அவலம் நீளும் ஒரு சூழ்­நி­லையில், கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்­களால் அல்­குர்ஆன் ஸுன்னா பற்­றிய ஆழ்ந்த அறி­வையும் நவீன சூழ­மைவு பற்­றிய  ஆழ்ந்த அறி­வையும் இணைக்க முடிந்­தது. இடை­வி­டாத தேடலும் வாசிப்பும் ஆய்வு மனப்­பாங்­குமே இதனை அவ­ரிடம் சாத்­தி­யப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும்.

சுக்ரி அவர்­க­ளது ஆக்­கங்­களில் தொனிக்கும் சம­கா­லத்­தன்மை (Contemporarity)யும் சூழ­மை­வைத்­தொட்டு பே சும் போக்கும் இந்த வாதத்­திற்கு வலி­தான ஆதா­ரங்­க­ளாகும்.

கலா­நிதி சுக்ரி அவர்­களின் மொழிப்­பு­லமை

தென்­மா­காணம் மாத்­த­றையில் பிறந்த வர் என்ற வகையில் சிங்­களம் அவ­ருக்கு நன்கு பரிச்­ச­ய­மா­னது. ஆரம்பக் கல்­வியை ஆங்­கில மொழி­மூலம் பயின்ற பின்­பு­லத்­திலும் பிற்­பட்ட கால உயர்­கல்­வியை  அம்­மொ­ழி­யா­லேயே தொடர்ந்­தவர் என்ற வகை­யிலும் ஆங்­கில மொழிப்­பு­லமை அவ­ருக்கு அல்லாஹ் வழங்­கிய பெரும் கொடை­யாகும். பேரா­தனை பல்­க­லைக்­க­ழக வாழ்க்­கையின் போது தமி­ழ­றி­ஞர்­க­ளுடன் அவர் பேணிய உற­வுகளும் தமிழ் இதழ்­களை அவர் தேடித் தேடி வாசிப்­பதில் காட்­டிய  இடை­ய­றாத ஆர்­வமும் சிங்­களம், ஆங்­கிலம் என்­ப­வற்­றுக்குச் சமாந்­த­ர­மான தமிழ் மொழிப்­பு­ல­மை­யையும் அவ­ருக்கு வழங்­கி­யது. இதற்­கப்பால் பேரா­த­னையில் அறபு மொழியை விஷேட துறை­யாகப் பயின்ற ஒற்றை மாணவன் என்ற பெரு­மையும் அவரைச் சாரும். பேரா­சி­ரியர் S. A இமாம் அவர்கள் சுக்ரி அவர்­களின் அற­பு­மொழி வளர்ச்­சிக்கும் அறி­வுத்­துறைத் தேட­லுக்­கு­மான ஊக்­க­வி­சை­யா­கவும் உந்து சக்­தி­யா­கவும் இருந்­துள்­ளதை கலா­நிதி அவர்கள் இறுதி வரை நினை­வு­ப­டுத்­து­ப­வ­ராக இருந்தார்.

கலா­நிதி சுக்ரி அவர்கள் வெவ்­வேறு துறைகள் சார் அறிவை வியா­பிக்க அவ­ருக்கு இருந்த இந்த மொழிப்­பு­லமை அடித்­த­ள­மாக விளங்­கி­யது என்­பதில் அணு­வ­ளவும்  ஐய­மில்லை. அவர் ஒரு தேசிய  புலமைச் சொத்­தாகப் பரி­ம­ணித்­த­மைக்கும் இந்த மொழிப்­பு­லமை ஒரு முக்­கிய கார­ண­மாகும். இஸ்­லாத்தை முறை­யாக முன்­வைத்து அதனை முழு­மை­யாகப் பிர­தி­நி­தித்­துவம் செய்­வதில் சுக்ரி அவர்கள் அய­ராது ஈடு­பாடு காட்­டி­னார்கள். அதற்கும் ஆங்­கில, சிங்­கள மொழி­ய­றிவு அவ­ருக்கு துணை­நின்­றது.

கலா­நிதி சுக்ரி அவர்­களின் சமூ­கப்­பங்­க­ளிப்பு

மர்ஹும் நளீம் ஹாஜி­யாரின் வேண்­டு­தலை ஏற்று 1981 ஆம் ஆண்டு நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் பணிப்­பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலா­நிதி சுக்ரி அவர்கள், அன்­றி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கும் எழுச்­சிக்கும் நெம்­பு­கோ­லாக நின்று உழைத்தார். அவரைப் போன்ற ஓர் அறிவு ஜாம்­பவான், பிரிட்டன் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கலா­நி­திப்­பட்டம் பெற்ற பெருந்­தகை நளீ­மிய்­யாவின் பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றி­யமை நளீ­மிய்­யா­வுக்கு கிடைத்த ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும். அத­னூடே ஜாமிஆ ஒரு உல­க­ளா­விய கணிப்­புக்கு உள்­ளா­னது. இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் ஒன்­றி­யத்தின் உறுப்­பி­ன­ராக ஜாமிஆ நளீ­மிய்யா ஏற்­கப்­ப­டவும் அது இஸ்­லா­மிய உலகில் அறி­யப்­ப­டவும் காலாக இருந்­தவர் கலா­நிதி சுக்­ரியே என்­பதை யாரும் மறுக்­க­மு­டி­யாது.

நளீ­மிய்­யாவின் பட்­டச்­சான்­றிதழ் இஸ்­லா­மிய உலகின் சில பல்­க­லைக்­க­ழ­கங்­களால் சம அந்­தஸ்­துடன் ஏற்­கப்­ப­டு­வ­தற்கும் சுக்ரி அவர்­க­ளது அய­ராத முயற்­சியே காரணம் எனலாம். இதைத் தாண்டி உல­கக்­கல்­வி­யையும், மார்க்கக் கல்­வி­யையும் இணைக்கும் ஒரு புதிய புரட்­சி­க­ர­மான பாடத்­திட்­டத்தை உரு­வாக்­கு­வ­தற்கு கலா­நிதி சுக்ரி அவர்கள் மேற்­கொண்ட பிர­யத்­த­னங்­களும் போற்­று­தற்­கு­ரி­ய­வை­யாகும். நாட்­டி­லுள்ள ஏனைய மத்­ர­ஸாக்­க­ளி­லி­ருந்து ஜாமிஆ நளீ­மிய்யா பெற்­றுள்ள இத்­த­னித்­தன்­மையின் தலை­மகன் மர்ஹும் சுக்ரி அவர்கள் என்­பதில் கிஞ்­சிற்றும் ஐய­மில்லை.

ஜித்­தா­வி­லுள்ள ராபிதா மற்றும் இன்­ன­பிற நிறு­வ­னங்­களின் நிதி­யா­த­ரவை ஜாமி­ஆ­வுக்குப் பெற்றுக் கொடுப்­ப­திலும் ஆரம்ப காலங்­களில் கலா­நிதி சுக்ரி அவர்கள் ஆற்­றிய பணி மகத்­தா­ன­தாகும்.

1986 இல் நளீ­மிய்­யாவில் வைத்து வெளி­யி­டப்­பட்ட Muslims of Sri Lanka : Avenues to antiquity  என்ற ஆய்வு நூலின் தொகுப்­பா­ள­ரான கலா­நிதி அவர்கள், அந்­நூலில் எழு­தி­யுள்ள கட்­டு­ரையின் ஊடே முஸ்லிம் சமூகம் மீதான அவ­ரது நுண்­மை­யான வாசிப்பைப் பிர­தி­ப­லித்­துள்ளார். இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் முஸ்லிம் வர­லாறு குறித்து இதற்கு முன்னர் இத்­த­கை­யதோர் ஆய்வு நூல்  வெளி­வ­ர­வில்லை.  கட்­டு­ரை­யா­ளர்­களில் பெரும்­பான்­மை­யினர் முஸ்லிம் அல்­லா­த­வர்கள் என்­பதும் தொழில்சார் வர­லாற்­றா­ளர்கள் என்­பதும் இந்­நூலின் கன­திக்கும் காத்­தி­ரத்­திற்கும் அணி சேர்க்­கின்­றன. இந்த ஆய்வு நூலைச் சாத்­தி­யப்­ப­டுத்­திய நடு­நா­யகம் கலா­நிதி சுக்ரி அவர்கள் என்­பதை நாம் அனை­வரும் நன்­றி­யுடன் நினை­வு­கூர வேண்டும்.

இஸ்­லா­மியக் கல்­வித்­துறை வளர்ச்­சிக்கும் பண்­பாட்­டுக்கும் கலா­நிதி சுக்ரி அவர்­க­ளது பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­ய­தாகும். சுமார் 18 நூல்­களை ஆங்­கில, தமிழ் சூழ­லுக்கு தந்­துள்ள அவர் இஸ்­லா­மிய சிந்­தனை, அடை­யாளம் என்­ப­வற்றை இலங்கைச் சூழலில் நிலை­நி­றுத்­து­வ­தற்கு முனைப்­புடன் செயல்­பட்­டுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘தத்­துவ வித்­துக்கள்’ என்ற மகு­டத்தில் பல ஆண்­டுகள் தொடர்ச்­சி­யாக அவர் ஆற்­றி­வந்த உரைத் தொடர் முஸ்­லிம்­களின் கவ­னத்தில் குவிந்­தது நினை­வு­ப­டுத்­தத்­தக்­கது.

பல்­வேறு நாடு­களில் நடை­பெற்ற சர்­வ­தேச மாநா­டு­களில் கலந்து கொண்டு முஸ்லிம் சமூகம், இஸ்­லா­மிய பண்­பாட்டு அடை­யாளம், மனித உரி­மைகள் தொடர்­பான பல்­வேறு தலைப்­பு­களில் அவர் ஆய்­வுக்­கட்­டு­ரை­களை சமர்ப்­பித்­துள்ளார். இது அவ­ரது புல­மைப்­பங்­க­ளிப்­புக்­கான நிலை­யான ஆதா­ரங்­க­ளாகும். தவி­ரவும் தேசி­ய­ள­வி­லான ஆய்வு மன்­றங்­களில் பல்­வேறு அம்­சங்கள் குறித்த ஆய்வுப் பேரு­ரை­க­ளையும் அவர் ஆற்­றி­யுள்ளார். பல உலகப் புகழ்­பெற்ற ஆய்­வி­தழ்­களில் அன்­னா­ரது ஆய்­வுக்­கட்­டு­ரைகள் பல வெளி­வந்­துள்­ளன. அவர் எழு­திய அந்த ஆய்­வுக்­கட்­டு­ரைகள் (ஆங்­கி­ல­மொழி மூலம்) ஒரு தொகுப்­பாக வெளி­வ­ர­வில்லை என்­பது கவ­னத்­திற்­கு­ரி­யது. கொழும்பு ஸாஹி­ராவில் இடம்­பெற்ற முஸ்லிம் கல்வி மாநாட்­டிற்கு தலைமை தாங்­கி­ய­போது அவர் ஆற்­றிய உரை எனது கவ­னத்தைப் பெரிதும் கவர்ந்­தது. 1999 ஆம் ஆண்டு லிபிய அழைப்பு பேர­வை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கருத்­த­ரங்கில் அவர் ஆற்­றிய உரை ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது. அவர் என்­னிடம் தெரி­வித்த ஒரு தக­வலின் படி 1970 களி­லி­ருந்து இலங்­கையின் நாலா­பு­றங்­க­ளிலும் அவர் ஆற்­றிய உரை­களின் எண்­ணிக்கை சுமார் 750 அளவில் இருக்­கக்­கூடும். இவ்­வு­ரை­களில் அவர் ஆற்­றிய வானொலி உரைகள் சில இன்றும் முஸ்லிம் சேவை சுவடிக் கூடத்தில் பாது­காப்­பாக உள்­ளது ஓர­ளவு மகிழ்ச்­சியைத் தரு­கி­றது.

கலா­நிதி சுக்ரி ஒரு தேசிய புல­மைச்­சொத்து

மறைந்த கலா­நிதி எம்.ஏ..எம். சுக்ரி அவர்கள் இந்­நாட்டின் அனைத்து இன மக்­க­ளாலும் மதிக்­கப்­பட்ட ஒரு புத்­தி­ஜீவி. அவ­ரது மொழிப்­பு­லமை, அறி­வுத்­திறன், மக்­க­ளோடு பழகும் இயல்பு, அவர் பணி­யாற்­றிய நிறு­வனத் தொடர்­புகள், கலந்து கொண்ட பொது மாநா­டுகள் என்­பன அவ­ருக்கு இந்த அந்­தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்­தன. இதனால் கலா­நிதி சுக்ரி ஒரு தேசிய புலமைச் சொத்­தாகத் திகழ்ந்தார். நாட்டின் பல்­வேறு அரச, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் முக்­கிய பத­விகள் வகித்த அவர் பல சபை­க­ளிலும் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ரா­கவும் விளங்­கி­யு­ளளார். இலங்கை தேசிய நூலக மற்றும் ஆவ­ண­வாக்க சேவை சபை  அங்­கத்­த­வ­ராக, இலங்கை சாகித்ய மண்­ட­ல­சபை உறுப்­பி­ன­ராக,  யுனெஸ்கோ இலங்கை தேசிய சபை அங்­கத்­த­வ­ராக என பல்­வேறு நிறு­வ­னங்­களில் இணைந்து தனது புலமைப் பங்­க­ளிப்­பினை அவர் வழங்­கி­யுள்ளார். சுமார் 20இற்கு மேற்­பட்ட  இத்­த­கைய தேசிய சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிறு­வ­னங்கள் அவரை இணைத்துக் கொண்டு அவ­ரது அறி­வையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்றுப் பய­ன­டைந்­தமை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவர் தேடித் தந்த பெரு­மை­யாகும்.

கலா­நிதி சுக்ரி அவர்­களின் ஆளுமைப் பண்­புகள்

பொது­வாக அறிவு பெற்­ற­வர்கள் அதிலும் கலா­நி­திப்­பட்டம் பெற்­ற­வர்­களும் சமூ­கத்தில் செல­வாக்­குப்­பெறும் பிர­பல்­யங்­களும் காலப் போக்கில் புலமைச் செருக்­குடன் (Intellectual arrogance) செயல்­ப­டு­வ­துண்டு. இன்று முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சுய­பட்டம் சூட்­டிக்­கொண்­டுள்ள சிலர் அவர்­க­ளுக்கும் பிற­ருக்கும் இடையில்  ஓர் இடை­வெ­ளியைப் பேணு­வதில் மத­மிஞ்­சிய ஆர்வம் காட்­டு­வதை நான் தெளி­வாகக் கண்­டுள்ளேன். பலர் தமக்கு மிகச் சோலி­யான ஒரு செயல் அட்­ட­வணை (busy schedule) இருப்­பது போலவும் தன்னை இல­கு­வா­கவும் நேர­டி­யா­கவும் எடுத்த மாத்­தி­ரத்­தி­லேயே தொடர்பு கொள்ள முடி­யாது என்­பதைப் போலி­யாகக் காண்­பிக்­கவும் செய­லா­ளர்­க­ளையும் பரி­வா­ரங்­க­ளையும் வைத்துக் கொண்டு உலா­வரும் இன்­றைய நாட்­களில் பேர­றிஞர் கலா­நிதி சுக்ரி அவர்­களின் பணி­வையும் அடக்­கத்­தையும் கண்டு நான் வியந்து போயுள்ளேன். தொலை­பே­சியில் அவரை யாரும் எந்த நேரத்­திலும் அழைக்­கலாம். அத்­த­னைக்கும் இத­மா­கவும் பொறுப்­பு­ணர்­வு­டனும் அவர் பதில் தருவார். அதே வேளை அறி­ஞர்கள் பொது­வாக சம­கா­லத்­த­வர்­களை அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. கலா­நிதி சுக்ரி அவர்கள் ஏனைய கல்­வி­மான்­க­ளையும் மதிக்கும் மகத்­தான குண­முள்­ள­வ­ராக இருந்தார். அவ­ரது புன்­ன­கையில் எப்­போதும் ஒரு இதம் தவழும், சொற்­களில் எளிமை இருக்கும். வார்த்­தை­களில் கனிவும் மென்­மையும் இழை­யோடும்.

ஒரு பத்­தாண்­டிற்கு முன்னர் அறிவை இஸ்­லா­மிய மய­மாக்கல் எனும் எனது நூல்  வெளி­வந்­தது. அதன் ஒரு பிரதி நளீ­மிய்­யாவின் ஓர் இளம் விரி­வு­ரை­யாளர் மூலம் அவர்  கைக்கு எட்­டி­யுள்­ளது. அதனை நன்கு வாசித்து விட்டு என்னைத் தொலை­பே­சியில் அழைத்து Keep it up என்று ஊக்கு­வித்தார். எனக்குக் கற்­றுத்­தந்த, என்­னை­விட 40 வயது அதிகம் நிறைந்த, அறிவில் என்னை விட பழுத்த ஒரு பேர­றிஞன் இந்தச் சின்­ன­வனை அழைத்துப் பாராட்டும் இந்தப் பக்­கு­வம்தான் அவ­ரது சிறப்­பம்சம். இந்த புலமை முதிர்ச்­சியின் அடை­யாளம் அவ­ரது பணி­வா­கவும் நல்ல பண்­பா­டு­க­ளா­கவும் வெளி­வந்­தது. இது இன்­றைய இளம் தலை­முறை அறிவு ஜீவி­க­ளுக்கு ஒரு நல்ல ஆதர்­ஷ­மாகும். சமூக அந்­தஸ்­துக்­காக (Social துக்காக (Social Status) சமூக இடைவெளி பேண விரும்பும் சில உலமாப் பெருந்தகைகளுக்கும் இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். கலாநிதி சுக்ரி அவர்களின் குரலை தொலைபேசியில் கேட்ட அந்தத் தருணத்தில் நான் மெய் சிலிர்த்துப் போனமை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

கலாநிதி எந்த இயக்கத்தையும் சாராது இயங்கியவர். நிறுவனங்கள் அற்ற வேண்டிய பணிகளைத் தனித்து நின்று ஆற்றிய ஒரு செயலவீரர். அவருக்கும் அவரைப் போன்ற பேரறிவாளர்களுக்கும் இயக்கம் தேவைப்படவில்லை. யாரது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் மசியாதவர் அவர். ஆனால் தெளிவான சில அரசியல் நிலைப்பாடுகள் அவரிடம் இருந்ததை அவருடனான உரையாடல் நான் புரிந்து கொண்டேன். சமூக மாற்றம் வெறும் கட்சி அரசியல் வழியே சாத்தியமில்லை என்பதும் அதற்கு நீண்டகால பண்பாட்டு உருமாற்ற செயன்முறை அவசியம் என்றும் ஆழமாக நம்பியவர் அவர். அவருடனான எனது நீண்ட உரையாடல்களை எதிர்காலத்தில் நூலாக வெளிக் கொணரும் உத்தேசம் உள்ளது. அவருக்கு  இலங்கை  முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையில் கடன்பட்டுள்ளது. அவரது ஆழ்ந்த ஆய்வுகளும் சிந்தனைகளும் இதுவரை காலமும் வெளியிடப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்ற வருத்தத்தை இங்கு பதிவு செய்ய  விழைகிறேன்.

சமு­கத்தைப் புரிந்­து­கொள்ளல், சமூ­கத்தை மாற்­றி­ய­மைத்தல் ஆகிய இரண்­டையும் தழு­விய சிந்­த­னை­யா­ளர்­களின் சட்­ட­கங்­களில் தன் காலத்தைத் தாண்டி சிந்­தித்த ஓர் அறி­வா­ளு­மை­யா­கவே அவர் நம்­முன்னால் பரி­ண­மிக்­கிறார். அல்லாஹ் அவ­ரது அத்­தனை செயல்­பா­டு­க­ளையும் அங்­கீ­க­ரித்து உயர்ந்த அமை­தியை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *